Wednesday, December 16, 2009

இந்நேரம் நம் கையில்!




'அமுதன், சிற்பக் கலைஞர்.' என்றது முன்பிருந்த போர்டு. சிறிய ஓட்டு வீடு. உள்ளே பத்தடிக்குப் பத்தடி வலிந்து பிரிக்கப்பட்டு அதுதான் அவரின் கலைக் கூடம்.

அஞ்சு நிமிஷத்துக்கு ஒரு முறை அவரது புலம்பல் வெளிப்பட்டது.

'ஆரம்பிச்சாச்சா?' எட்டிப் பார்த்தாள் பின்கட்டில் பாத்திரம் கழுவிக் கொண்டிருந்த ஜானகி.

கடைசியாகச் செய்து முடித்த வேலையில் கிடைத்த காசு கரைந்து விட்டிருந்தது. ஆச்சு இருபது நாள்! ஒரு ஆர்டரையும் காணோம்!

‘’சே, எப்படி சமாளிக்கப் போறோம் ஜானகி? யாரெல்லாமோ வந்து விசாரிக்கிறாங்க. ஆனால் ஆர்டர் தர ஒருத்தரும் வர மாட்டேங்கிறாங்களே! அஞ்சாம் தேதி வாடகை தரணும். பாலிலேருந்து மளிகைக் கடை வரை பாக்கி தீர்க்கணும். ஹரியோட ஸ்கூல் ஃபீஸ் கட்டணும்....''

அவரைப் பார்க்கப் பார்க்க மனதைப் பிழிந்தது அவளுக்கு. செதுக்கும் கல்லின் ஒவ்வொரு சதுர சென்டி மீட்டரும் ஏராளம் கலை நுட்பத்தைப் பறை சாற்றும். எழில் மன்றத்தைக் கடை விரிக்கும். அப்பேர்ப்பட்ட மேதாவி இப்படி மாய்ந்து போன கடந்த காலத்தையும் தேய்ந்து தோன்றும் எதிர்காலத்தையும் நினைத்து ஓய்ந்து கிடக்கிறாரே?

எப்படி அவருக்கு உணர்த்துவது?
ம்... அதுதான் சரி. அவரின் வழியிலேயே...

ஸ்பூனை எடுத்து பாத்திரத்தின் மீது சிற்றுளி போல் கொத்த ஆரம்பித்தாள். டொங் டொங் என்றெழுந்த அந்த ஓசை அவர் கவனத்தை ஈர்க்க, முனகலை நிறுத்திவிட்டு காதைக் கூர்மையாக்கினார்.

வருடக் கணக்காக சிற்பங்களின் கீழ் எழுத்தைப் பொறிக்கிற அவர் புலன்களுக்கு மனைவி பொறித்த அந்த மூன்று வார்த்தைகளையும் சப்தத்தை வைத்தே அறிந்து கொள்ள முடிந்தது.

மறு நிமிடமே துள்ளி எழுந்தார். மகனை அழைத்துக்கொண்டு தன் கலைக் கூடத்தில் நுழைந்தார். ஓரமாய்க் கிடந்த மரக்கட்டை ஒன்றை எடுத்தார். பென்சிலால் சில கோடுகள் கிழித்தார். கத்தியால் செதுக்கத் தொடங்கினார். இடையிடையே மகன் ஒவ்வொரு சந்தேகமாகக் கேட்க, விளக்கினார்.

கொஞ்ச நேரத்தில் அழகான சின்ன ரயில் எஞ்சின் மாடல் ஒன்று மகன் கையில். உலகமே கையில் கிடைத்த மாதிரி சிறுவன் ரசித்து விளையாட மகனும் தந்தையுமாக மகிழ்ச்சி பொங்கும் கணங்களைப் பரப்பியதில் அந்தச் சின்ன வீடு தஞ்சைப் பெரிய கோவிலளவு விரிந்தது. அந்த உற்சாகத்தில் தானும் பங்கு கொண்டாள் ஜானகி.

மகிழ் நிமிடங்கள் ஜெட்டாகப் பறக்க...

''ஐயோ. மணி நாலு! நாம இன்னும் சாப்பிடலை!'' மகனை அழைத்துக்கொண்டு மனைவியுடன் சாப்பிட உட்கார்ந்தார்.

எப்படியிருந்த தந்தை எப்படி மாறிவிட்டார்! வியப்பு நீங்காத ஹரி, ''அப்பா, கணக்கு பாடம் சொல்லித் தாங்கப்பா!'' என்று கேட்க, ''கொண்டா, கொண்டா!'' என்று அன்போடு அதில் புகுந்தார் அமுதன்.

சாயங்காலம் வீட்டுக்கு வந்தனர் இரு முதியவர். அவர்களின் கல்விக்கூடத்தில் நிறுவவிருந்த ஸ்தாபகரின் சிலை செய்ய அவரைப் பணித்தனர்.

'அட, எல்லாம் காலா காலத்தில் எப்படி சரியாகவே நடக்கிறது! இதற்கிடையில் வெம்பி மாய்ந்து பொழுதை வீணாக்க இருந்தேனே!'

சரியான சமயத்தில் சரியான சேதியை மூன்றே வார்த்தைகளில் தன் காதுக்கு அனுப்பிய அந்தத் தேவதையை - தன் மனைவியை - நன்றியுடன் பார்த்தார், 'இந்நேரம் நம் கையில்!' என்ற அந்த மூன்று வார்த்தைகளை நினைவு கூர்ந்தபடி.

8 comments:

Venkat Nagaraj said...

//'அட, எல்லாம் காலா காலத்தில் எப்படி சரியாகவே நடக்கிறது! இதற்கிடையில் வெம்பி மாய்ந்து பொழுதை வீணாக்க இருந்தேனே!'//

"இந்நேரம் நம் கையில்" - சரியாக சொல்லி இருக்கிறீர்கள்.

வெங்கட் நாகராஜ்
புது தில்லி

Rekha raghavan said...

//மாய்ந்து போன கடந்த காலத்தையும் தேய்ந்து தோன்றும் எதிர்காலத்தையும் நினைத்து ஓய்ந்து கிடக்கிறாரே?//

அருமையான வார்த்தை விளையாட்டில் சிறுகதை ஒரு சிறந்த காவியமாகத் தெரிகிறது. அருமையான சிறுகதையை வாசித்த திருப்தி.

ரேகா ராகவன்

aazhimazhai said...

மகிழ் நிமிடங்கள் ஜெட்டாகப் பறக்க...

''ஐயோ. மணி நாலு! நாம இன்னும் சாப்பிடலை!'' மகனை அழைத்துக்கொண்டு மனைவியுடன் சாப்பிட உட்கார்ந்தார்.

ரொம்ப நல்ல இருக்கு !!! நல்ல நடை !!!

CS. Mohan Kumar said...

//இந்நேரம் நம் கையில்// நல்ல message!!

ரிஷபன் said...

ம்... அதுதான் சரி. அவரின் வழியிலேயே...

உங்கள் நடையிலேயே.. சிறப்பான கதையோட்டம்..

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

சுவாரஸ்யம் துளிக் கூட தொய்ந்து போகவில்லை!

Chitra said...

'அட, எல்லாம் காலா காலத்தில் எப்படி சரியாகவே நடக்கிறது! இதற்கிடையில் வெம்பி மாய்ந்து பொழுதை வீணாக்க இருந்தேனே!'..................பலரும் உணர வேண்டிய வார்த்தைகள். அருமையான கதை, சார்.

கிருபாநந்தினி said...

\\'இந்நேரம் நம் கையில்!' // இதைப் பெரியதாக எழுதி நம் கண்ணில் படுகிற இடமாக ஒட்டி வைத்துக்கொண்டால் சோர்வு நீங்கி உற்சாகம் பிறக்கும் என்பது நிச்சயம்!

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!