Sunday, January 31, 2010

கண்டதே காட்சி!




சந்தித்த இடங்களிலெல்லாம்
சம்பாஷித்து மகிழ்ந்தார்கள் மனிதர்கள்.
சந்திப்பதற்கென்றே
சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொண்டார்கள்.
அது ஒரு காலம்...
இப்போது
எல்லாமே காட்சியாக விரியவேண்டும் அவர்களுக்கு.
சில சமயம் மெகா சீரியல் காட்சியாக.
எனவே இப்போதெல்லாம்
கவிதைகளில் மட்டுமே
பேசிக் கொள்ளுகிறார்கள் மனிதர்கள்.


ஒரு நிமிடம்...

முகம் கண்டே ஒதுங்கி விடுகிறார்கள்.
நிலை அறிந்தால் நெருங்கத் தயங்குகிறார்கள்.
அப்படி உன்னிடம் நான்
என்ன யாசித்துவிடப் போகிறேன்?
அப்படி எனக்குத் தந்துவிடத்தான்
உன்னிடம் என்ன உளது
வெறும் பணத்தைத் தவிர?
உன்னிடமிருந்து பெறும் எதுவுமே என்
சோகத்தைத் துடைத்து விடப் போவதில்லை
உன்னுடன் பகிர்தலைத் தவிர!

Wednesday, January 27, 2010

அந்த ரகசியம்...

திகாலை ஐந்து மணி. வாகீஸ்வரன் எழுந்து கொண்டார். மேஜையடியில் அமர்ந்தார். நேற்று விட்ட இடத்திலிருந்து கதையை எழுத ஆரம்பித்தார்.

வாசலில் கோலமிட்டு வந்தாள் மனைவி. ''மளிகை சாமான் தீரப்போகுது. இந்த வாரம் வாங்கணும். பாக்கி முன்னூறு ரூபாய் தரணும்.''

திக்கென்றது. ''ம், சரி...'' தொடர்ந்து எழுதலானார்.

பத்து மணி. போஸ்ட்மேன் வீசிய கடிதத்தைப் படித்தாள் மனைவி.

''யாரு?''

''உங்க ஒன்றுவிட்ட ஒண்ணுவிட்ட தங்கச்சி மகன் ரகு பத்தித்தான். வேலை கிடைக்கலே, சீட்டு நடத்திப் பிழைக்கிறேன்னு உதவச் சொன்னவனை நம்பி கஷ்டப்பட்டு பணம் கட்டினீங்களே, அவன்தான்.. ஊரைவிட்டு ஓடிட்டானாம்...''

ரெண்டாயிரம் ரூபாய்! தலை சுற்றியது.

கதை தொடர்ந்தது.

பன்னிரண்டு மணி. தரகர் கந்தப்பன் எட்டிப் பார்த்தார்.

''மதுரைப் பக்கம் ஒரு வரன் வந்ததே உங்க பொண்ணுக்கு? அவங்களை நேத்து சித்திரைத் திருவிழாவில சந்திச்சு பேசினேன். வேறே தகைஞ்சுட்டதாம்.''

''அப்படியா? ம்,சரி...'' எழுத்து தொடர்ந்தது.

பிற்பகல் மணி மூன்று. நண்பர் மாதவன்.

''...அந்தப் பையன் சிவா ரொம்ப ஏழைன்னு வேலை வாங்கிக் கொடுத்தீங்களே. அவன் எல்லார்கிட்டேயும் உம்மைப் பத்தி இல்லாததும் பொல்லாததும் சொல்லிட்டிருக்கான்...''

அவனா? மனசு வலித்தது. தொடர்ந்து எழுதி முடித்தார் கதையை.

ந்தக் கதை வெளியான மறு நாள்...பரபரப்பாக அவர் வீட்டில் நுழைந்த வாசகர் அன்புராஜ் அவர் கையைப் பிடித்துக் குலுக்கித் தன் பாராட்டைத் தெரிவித்தார்.

''ரொம்பப் பிரமாதமாக இருந்திச்சு சார் கதை! காரக்டர்ஸ் மனசில எழும் வேதனைகளை, வலிகளை எப்படி சார் உங்களால இப்படி நுணுக்கமா தத்ரூபமா எழுத முடியுது?''

எப்படி என்பதை அவர் சொல்லவில்லை. ''ஏதோ வருது.''

Friday, January 22, 2010

கொடி அசைந்ததும்...



'கொடி அசைந்ததும்காற்று வந்ததா? காற்று வந்ததும் கொடி அசைந்ததா?' பாட்டைக் கேட்கும் போது அதே போல் சில கேள்விகள் மனதில் எழாமலில்லை. சிலவற்றையாவது இதில் இட்டு பதில் தேட முயல்கிறேன்.


1. ஆடை குறைந்ததும் ஃபாஷன் வந்ததா, ஃபாஷன் வந்ததும் ஆடை குறைந்ததா?


2. பி.பி. வந்ததால் கோபம் வருகிறதா, கோபம் வருவதால் பி.பி. வந்ததா?


3.பத்திரிகை போரடித்ததால் டி.விக்கு மாறினார்களா, டி.வி.க்கு மாறியதால் பத்திரிகை போரடித்ததா?


4.எல்லாருமே கவிதை எழுதுவதால் கவிதை பாப்புலர் ஆனதா, கவிதை பாப்புலர் ஆனதால் எல்லாருமே கவிதை எழுதுகிறார்களா?


5. போர் அடிப்பதால் வேலைகளைத் தவிர்க்கிறோமா வேலைகளைத் தவிர்ப்பதால் போர் அடிக்கிறதா?


6.கதாநாயகன் பண்ணுகிற அசட்டுக் காரியங்களை சகிக்க முடியாததால் காமெடியனை அவர் என்ன செய்தாலும் ரசிக்கிறோமா காமெடியன் என்ன செய்தாலும் ரசிக்கும்படி இருப்பதால் க. நாயகன் பண்ணுகிற காரியங்களை சகிக்க முடியவில்லையா?


7. கிளையன்ட் ஏமாளியா இருக்கிறதால நாம புத்திசாலியாகிறோமா நாம புத்திசாலியா இருக்கிறதால கிளையன்ட் ஏமாளியாகிறாரா?


தெரிந்தால் சொல்லுங்களேன்...

Friday, January 15, 2010

கவன ஈர்ப்புகள்...


ந்தப் பாதை எங்கோ செல்கிறது
என் மனதைப் போலவே.
வளைவுக்கு அப்பால் என்ன இருக்கிறது
என்பது தெரியாது எனக்கு.
ஆர்வமோ வளைத்துப் போடமுடியாததாய்...
'இந்த வரை வந்தது போதும்,
இடத்துக்கு என்ன குறை?'
என்றிருக்க முடியவில்லை நிறைவாய்.
இதுகாறும் சேகரித்த நினைவுகளின் பலம் ஒருநாள்
இற்றுப் போய் விடக்கூடும்.
கசப்பான அனுபவங்கள் மேலும்
களைப்பேற்படுத்தி விடக் கூடும்.
இனிய ஆச்சரியங்களும் ஏன்
இருக்கக்கூடாது இதற்கப்பால்?
ஒன்று மட்டும் தெளிவாய்...
நான் போய்க்கொண்டே இருக்க வேண்டும்.
நிற்குமிடங்கள் இளைப்பாற மட்டுமே.
அந்தப் பாதை எங்கோ செல்கிறது.
என் மனம் அதன் பின்னால் செல்கிறது.

Monday, January 11, 2010

ராத்திரியில் காத்திருக்கும்...

ணவனை இப்படி வேலை வாங்குவது பற்றி ராஷ்மியைக் குறை சொல்லாதவர்களே கிடையாது.

ஸாஃப்ட்வேர் இஞ்சினீயர் அவன். அதிலும் பிராஜெக்ட் லீடர். கம்பெனியில் ராத்திரி ஒன்பது மணி வரை பிசியாக வேலை செய்துவிட்டு அலுத்துக் களைத்து வீடு திரும்பும் அவனை பத்துப் பாத்திரம் தேய்க்க அனுப்பி விடுவாள் ராஷ்மி.


''என்னங்க, தண்ணியிலே புழங்கறது என் ஸ்கின்னுக்கு சரிப்பட்டு வரலே! ராத்திரி மட்டும் பாத்திரங்களை நீங்க வாஷ் பண்ணிக் கொடுத்துடுங்களேன், பிளீஸ்!'' என்று நைசாக அவன் தலையில் கட்டிவிட்டாள் அந்த வேலையை. அவனும் மறுக்காமல் அத்தனையையும் இழுத்துப் போட்டுப் பளிச்சென்று தேய்த்து வைப்பான்.


கம்பெனியிலிருந்து அவன் எத்தனை லேட்டாக வந்தாலும் தேய்க்கவேண்டிய பாத்திரங்கள் அவனுக்காகக் காத்திருக்கும். கைலியைக் கட்டிக் கொண்டு புகுந்தான் என்றால் அடுக்களைக்குள் ஒரே தாம் தூம் தான். கரிசனத்துடன் அவள் தொங்க விட்டிருக்கும் ரேடியோவிலிருந்து எஃப். எம். கேட்டபடியே வேலையை முடித்து விட்டுத்தான் சாப்பிட உட்காருவான்.


வேலைக்காரி வழியாகக் கசிந்து விட்டது இந்த விஷயம். பக்கத்து ஃபிளாட்காரியும் ராஷ்மியின் சிநேகிதியுமான நான் இதை அவளிடமே ஒரு நாள் கேட்டு விட்டேன்.


கேட்டதும் ராஷ்மி கொஞ்சம் அசந்துதான் போனாள். பிறகு மெல்லச் சொன்னாள்...


''ஸாஃப்ட்வேர் கம்பெனி வேலையைப் பத்தித்தான் உனக்குத் தெரியுமே? அதிலும் இவர் பிராஜக்ட் லீடர் வேறே. நாள் பூராவும் பரபரப்பா இருப்பாரு. மென்டல் டென்ஷன் ஜாஸ்தி. அது ரிலீசாகிறதுக்குத்தான் இப்படி ஒரு ஏற்பாடு. உண்மையில் இது மறைமுகமா ஒரு சைக்காலஜிகல் உதவிதான் அவருக்கு. பாத்திரங்களை அவர் இஷ்டப்படி உருட்டறதிலேயும் வெளுக்கறதிலேயும், நாள் முழுக்க அவர் மனசில் தேங்கியிருக்கும் டென்ஷன் எல்லாம் வடிஞ்சுடும். முன்னைவிட இப்பல்லாம் ரொம்ப ஃ ப்ரெஷ்ஷா, சந்தோஷமா வந்து சாப்பிட உட்கார்றாரு.''

பதிலைக் கேட்டு நான் அசந்துபோய் புன்னகைத்தேன்.


(விகடன் 09-10-2005 இதழில் வெளியான என் ஒரு பக்கக் கதை.)

Friday, January 8, 2010

அணுகு முறை


ண்பர் சேது வீட்டில் நான் நுழைந்த போது அவர் தன் பையனை வார்த்தைகளால் துவைத்துக் கொண்டிருந்தார். போன வருஷம் வாங்கிய ஐந்தாம் ராங்கை விட்டு இப்ப எட்டுக்கு வந்துட்டானாம்.
''வாத்தியார் என்ன சொன்னார்? பையன் ரொம்ப ஸ்லோன்னு சொன்னாரா?'' என்று கேட்டேன்.
''இல்லை.''
''அப்ப ஐன்ஸ்டீன் மாதிரி எல்லாம் வரமாட்டான்.''
''பையன் கணக்குல புலி.''
''அப்ப ஒரு பெஞ்சமின் ஃபிராங்லின் ஆகவும் முடியாது. ஏன்னா அவர் கணக்குல வெரி புவர்! ஸ்பெல்லிங் மிஸ்டேக்ஸ் நிறைய வருதா?''
''வரவே வராது.''
''சே, பெர்னார்ட்ஷா ஆகிறதுக்கும் சான்ஸ் இல்லே! கிளாசில் அடி மட்டத்துக்குப் போயிருந்தானா?''
''நெவர்.''
''போச்சு. எடிசன் ஆகிற வாய்ப்பும் இல்லே. சரி, அடிக்கடி ரொம்ப டல்லா இருப்பானா?''
''அப்படி நான் பார்த்ததே இல்லே.''
''அப்ப ஜேம்ஸ் வாட் மாதிரியும் வரமாட்டான் போல... ஒகே. உங்க கவலை நியாயமானது தான். இத்தனை பிரபல மனிதர்களின் ஒரு மைனஸ் பாயிண்டும் இல்லையே இவனிடம்?''
கையைப் பிடித்துக் கொண்டார் நண்பர். ''என் கண்ணைத் திறந்தீங்க... டேய் பிரனேஷ், இங்கே வாடா,'' என்றார் மிக மிக அன்பான குரலில், ''சாரிடா!''


(குமுதம் 14-02-2007 இதழில் வெளியான என் ஒருபக்கக் கதை)