Thursday, February 18, 2010

யுக்தி


ருகில் வந்த மனைவி யமுனா கேட்டாள்.

''நீங்க போகிறது உங்க பிரமோஷன் இண்டர்வியூவுக்கு. ஒரு நாள் தான் அங்கே இருக்க முடியும். அங்கே இருக்கிற உங்க சித்தப்பா மகன் முருகேஷை அவன் வேலை பார்க்கிற கம்பெனியில் போய்ப் பார்க்கணும். நேரத்துக்கு ரயிலைப் பிடிச்சுத் திரும்பணும். இத்தனை வேலைக்கிடையில் வருணையும் கூட்டிட்டுப் போய் என்ன பண்ணப் போறீங்க? அவன் படிப்பு வேற பாழாகும்.''

''எல்லாம் காரணமாத்தான் அழைச்சிட்டுப் போறேன். வந்ததும் பாரு,'' என்றார் சுப்புராம்.

ன்டர்வியூ முடிந்ததும் டைடல் பார்க் சென்றார்கள். அகன்ற லிஃப்டில் உயர்ந்து அந்த கம்ப்யூட்டர் கம்பெனியில் பிரவேசித்தார்கள்.

ஏ.சி. நாசியை வருடிற்று. அசத்தலான க்யூபிகள்களில் பிரபுக்கள் போல அமர்ந்து வண்ணத் திரைகளுடன் உறவாடி அமரிக்கையாக பிராஜெக்டுகளைப் படைத்துக் கொண்டிருந்த இளைஞர்களை பிரமிப்புடன் பார்த்துக் கொண்டே வந்தான் வருண். ஒவ்வொரு விஷயமாக முருகேஷிடம் கேட்க அவன் விளக்க, இரண்டு மணி நேரம் போனதே தெரியவில்லை இவனுக்கு.

த்து நாட்களுக்குப் பின்...

'என்னங்க, வருண் ஆளே மாறிவிட்டான். இப்பல்லாம் முன்னைவிட நல்லா படிக்கிறான். நல்ல மார்க் வாங்கி முருகேஷ் வேலை பார்க்கிறது மாதிரி ஒரு பெரிய கம்ப்யூட்டர் கம்பெனியில் சேரப் போகிறானாம். யோசனையோடுதான் செயல் பட்டிருக்கீங்க!''

கணவரைப் பாராட்டினாள் யமுனா.

(01-08-2007 குமுதம் இதழில் வெளியான என் ஒரு பக்கக் கதை)

Saturday, February 13, 2010

இன்று...




அக்கறையாய் நான் தொடுக்கும்
இக்கவிதை நதிக்கு
அக்கரை நீ, இக்கரை நான்.
என்னையும் உன்னையும் தொட்டபடியே
எப்போதும் ஓடும்.
எத்தனை நீ தள்ளிப்போனாலும்
அந்த அகலத்தை
இட்டு நிரப்பிக்கொள்ளும்
கவிதைப் புனல் என்னிடம்.
ஆனால்
கடல் கொள்ளுமா அந்த
வெள்ளப் பெருக்கை?
எனவே விரைந்து வந்து விடு
உற்பத்தி ஸ்தானத்துக்கே.
ஒரு துளியாய் நாம்
ஒன்றாவோம்.

Tuesday, February 9, 2010

மேட்டர் என்னன்னா... (சிரிக்க மட்டும்)

''அதுக்கு ஒரே ஒரு வழி தான் இருக்கு!'' என்றாள் என் சகதர்மிணி.
''அசடு, நான் என்ன ஒன்பது வழியா கேட்டேன்? சொல்லு சட்டுன்னு.''
அவ சொல்லுமுன் அது என்ன பிரசினைன்னு...

எல்லாத்துக்கும் காரணம் இந்த ப்ளாக் சீசன் தான்! ஆபீசிலேர்ந்து அடுத்த வீடு வரை யாரைப் பார்த்தாலும் ஒரு ப்ளாக் திறந்து வெச்சு தினம் எழுதித் தள்ளிட்டிருக்காங்க, என்னைத் தவிர.

ரெண்டு மாசம் முந்தி ...எங்க கிராமத்துக்குப் போயிருந்தேனா, அங்கே ஒரு ரசமான அனுபவம். எங்க சித்தப்பா என்ன பண்ணினாரு பக்கத்து வீட்டில தண்ணி இறைக்கிற மோட்டாரை எப்படி ஷெட் போட்டு வெச்சிருக்காங்கன்னு எட்டிப் பார்த்திருக்காரு. அப்போது பார்த்தா அவங்க வீட்டுக்கு விருந்தாளியா வந்த பொண்ணு குளிச்சிட்டிருக்கணும்? அப்பால என்ன, வறுத்தெடுத்துட்டாங்க அவரை. விலாவில நல்ல அடி.

இதை காஷுவலா ஆபீஸ் நண்பரிட்ட சொன்னேன். அடுத்த நாளே அவர் 'விலா'வாரியா தன் ப்ளாக்கில அதை எழுதிட்டார். அவர் கொடுத்த டிஸ்க்ரிப்ஷன் வேறே அது என் சித்தப்பாதான்னு எளிதா தெரியற மாதிரி இருந்தது.

அப்புறம் நான் யார்கிட்ட கிராமத்தைப் பத்தி என்ன பேசும்போதும் 'அதுவா, படிச்சுட்டேனே'ன்னு சொல்றாங்க.

போன மாசம் ஒரு வெப் சைட்டில் ஒரு ஹிலாரியஸ் ஸ்டோரி படிச்சுட்டு நண்பரிடம் சொல்ல அது அன்னிக்கு சாயங்காலமே பப்ளிஷ் ஆயிட்டது அவர் ப்ளாக்கில. என்ன நிகழ்ச்சி யார்ட்ட சொன்னாலும் மறு நிமிடமே ஒரு பொருத்தமான படத்தோட கணக்கா கணினித் திரையில ஒளிருது..

வரவர எங்கே என்ன நடந்தாலும், அதை நாலு பேர்ட்ட பகிர்ந்துக்க முடியலே. சில சமயம் நான் ஆரம்பிக்கறதுக்குள்ள அந்த என் கதையை எனக்கே சொல்றாய்ங்க. என்ன கொடுமை சார் இது?

கடைசியில என் மனைவி அந்த ஒரு வழியை சொன்னாளோ பிழைத்தேனோ!

அவ சொன்ன மாதிரி நானே ஒரு பிளாகைத் தொடங்கிட்டேன்.

ஹி, ஹி, ஏதாச்சும் இன்ட்ரஸ்டான மேட்டர் இருக்கா சொல்லுங்களேன், கேட்போம்!

Saturday, February 6, 2010

அவ்வளவே!


ரவின் நிஜ நடுக்கம்
சாமத்தின் முன்பே எழுகிறது
அஞ்ஞானத்தின் அளவுக்கேற்ப...

னிமையின் உள் பயம்
வெகு சீக்கிரமே தொடங்குகிறது
அறியாமையின் அளவுக்கேற்ப...

முதுமையின் முக வாட்டம்
இளமையிலேயே தென்படுகிறது
பக்குவமின்மையின் அளவுக்கேற்ப...

றுமையின் கோரப்பிடி
எளிதிலேயே இறுக்குகிறது
மென்மையின் அளவுக்கேற்ப...

வெறுமையின் விசுவ ரூபம்
விரைந்து வியாபிக்கிறது
புரியாமையின் அளவுக்கேற்ப...

Wednesday, February 3, 2010

தலைப்பு

''என்னங்க, மலர்ச்சரம் பத்திரிகையிலிருந்து உங்ககிட்டே ஒரு தலைப்புக் கொடுத்து கட்டுரை எழுதித்தரக் கேட்டாங்களே, எழுதி முடிச்சிட்டீங்களா?'' கேட்டாள் சுமதி, பிரபல புள்ளி பராங்குசத்தின் மனைவி.

''அதைத்தான் நாலு நாளா யாரைப்பத்தி எழுதறதுன்னு யோசிச்சிட்டிருக்கேன். யாருமே ஞாபகம் வரமாட்டேங்கறாங்க..'' தலையைச் சொறிந்து கொண்டார்.

அவளும் யோசித்தாள்.

''ஏங்க, நம்ம ராமசாமியைப்பத்தி எழுதுங்களேன்.''

''ராமசாமியா, யார் அது?'' அவருக்கு நினைவில்லை.

''அதுதாங்க, உங்ககூட காலேஜில ஒண்ணாப் படிச்சதா சொல்வீங்களே?''

''அவனா? அவன் அப்புறம் என்ன ஆனான்?'' யோசித்தார்.

''ஏதோ சமூக சேவை நிறுவனத்தில் செயலாளரா இருக்கிறதா சொன்னாரே, ஒரு முறை?'' என்றவள் அவர் எப்பவோ எழுதிய ஒரு கடிதத்தைத் தேடி எடுத்துக் கொடுத்தாள்.

''ஒ, அப்ப ஜமாய்ச்சுரலாம்,'' என்றவர் உட்கார்ந்து ரெண்டு பக்கம் எழுதி, தலைப்பை மேலே எழுதினார்:

'என்னால் மறக்க முடியாத நபர்.'



(குமுதம் 04-06-2008 இதழில் வெளியான என் ஒரு பக்கக் கதை)