Sunday, February 6, 2011

மூன்று கண்கள்...




மாலினிக்கு கொஞ்ச நேரம் அழ வேண்டும் போல இருந்தது. தோழிக்கு என்னவென்று பதிலுரைக்க? இப்படியா சொல்லி வெச்சது போல எல்லாரும் சேர்ந்து அவளைப் படுத்துவர்? சந்தேகமே இல்லை, நாற்பத்தேழில் கிடைத்த சுதந்திரம் ஆண்களுக்கு மட்டும் தான்...

கணினியின் வெண்திரையில் லதிகாவின் இமெயில் அவளைப் பதில் கேட்டது.

'...பாருடி, ஒன்ஸ் இன் எ லைஃப் டைம் ஆப்பர்சூநிட்டி! பத்மாவிலேர்ந்து சரளா வரை ஒவ்வொருத்தர் அட்ரஸ் கண்டு பிடிக்க நான் பட்ட பாடு! இருபது வருஷத்துக்கப்புறம் நாம எல்லாரும் ஒண்ணா லூட்டி அடிக்கப் போறோம், ஜெய்ப்பூர், சிம்லான்னு கலக்கப் போறோம். முன்னால நாம காலேஜ் டூர்ல கலக்கின அதே இடங்களுக்கு! எல்லாரும், 'எஸ்' கொடுத்திட்டாங்க. எவ்ரிதிங் அரேஞ்ச்ட். இந்த இருபதாம் தேதி புறப்படறோம். உனக்கும் சேர்த்துத்தான் இடம் போட்டிருக்கு. எதுக்கும் ஒரு ஒ.கே., மெயில் கொடுத்திடு... பை...'

இந்த ஐடியாவை லதிகாவிடம் போட்டுக் கொடுத்ததே மாலினி தான். இப்ப அவளாலேயே வர முடியாதுன்னு சொல்ல வேண்டியிருக்கு.

மகள், கணவன், மாமனார் என்று என்நேரமும் இயங்குகிறவளுக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்... மனசு கெக்கலி பண்ணிற்று.
.
நடந்தது நிஜம் தானா? அவளால் நம்ப முடியவில்லை...



நேற்று மாலை...

கம்பெனியிலிருந்து திரும்பிய கணவர் கணேசனிடம் டூர் பற்றி சொல்ல வாயெடுத்த போது, ''மாலு, சி.சி.ஐ.ஈ. அடுத்த எக்ஸாமுக்கு அப்ளை பண்ணிட்டேன்!''

''ஐயோ, அப்ளை பண்ணிட்டீங்களா? அது பத்தி நாம டிஸ்கஸ் பண்ணவே இல்லையே இன்னும்?''

''அதான் நீ இருக்கியே, அப்புறம் என்ன கவலை? போன வருஷம் எல்லா ஹெல்பும் நீ தானே பண்ணினே... நாளையிலேருந்து உன் வேலை தொடங்குது. ரெண்டு மாசம்... அவ்வளவுதான். வெற்றி நமதே!'' என்று சொல்லிவிட்டார். இனி என்ன சொல்றது... என்னத்தை கேக்கிறது? மெல்ல சொல்லிப் பார்க்கலாமா அடுத்த வருஷம் கூட எழுதலாமேன்னா, கேட்க மாட்டார். வந்த ஸ்பிரிட் போயிடுச்சு உன்னாலம்பார்...

அதற்குள் மகள் சங்கீதா அடுத்த குண்டைப் போட்டாள்.

''மாம், புராஜெக்டில் ஃபர்ஸ்டா வந்தேனில்லையா...டான்ஸிலேயும் ஒரு கை பாருன்னாங்க கமலி டீச்சர். அதான், பேர் கொடுத்திட்டேன். அடுத்த வாரம் ஃபங் ஷன். நீதான் எல்லா ஹெல்பும் பண்றே.''

''அடிப்பாவி, என்கிட்டே ஏதும் கேக்க வேணாமா?''

''உன்கிட்ட கேட்டா என்ன மறுக்கவா போறே என் செல்ல அம்மா?''

''வரவர எல்லாம் உன் இஷ்டம்னு ஆயிப் போச்சு! போய் முடியாதுன்னு சொல்லிடு!''

''நதிங் டூயிங். நாளையிலேர்ந்து ரிஹர்சல். தயாரா இரு.'' இவள் சொன்னதை கொஞ்சமாவது பொருட்படுத்தினால் தானே?

இந்தப் பக்கம் வந்தால் மாமனார் அவர் பங்குக்கு...

''மாலினி, இங்கே வாம்மா!''

''சொல்லுங்க மாமா.''

''ஒரு ஹெல்ப் பண்ணனுமேம்மா... அடுத்த வாரம் கொல்கத்தாவில எழுத்தாளர் மாநாடு இருக்கு. நாளைக்கு நான் கிளம்பணும். தோட்டத்தில தேங்காய் வெட்டற வேலை இருக்கு. கிணத்தில தூர் வார்றதுக்கு ஆள் வருது. கொஞ்சம் மேனேஜ் பண்ணிக்கறியா?''

''சரி, மாமா.'' என்று சொல்லத்தான் முடிந்தது.



ரி சரி.... எல்லாம் நம் தலை எழுத்து. என்ன உழைத்து என்ன? எல்லாம் வரிசையாய் வேலை வாங்கத்தான் காத்திருக்காங்க.

ரிப்ளையை கிளிக் பண்ணி தோழிக்கு பதில் டைப் பண்ண ஆரம்பித்தாள்.

''ஸாரிடா. . வீட்டில் சில வேலைகள். நான்தான் சொன்னேன் இந்த யோசனையை என்றாலும் என்னால உங்களோட கலந்துக்க முடியலே... ஆல் த பெஸ்ட்!''

'செண்ட்'- பட்டனை கிளிக் செய்யப் போகுமுன் 'டக்'கென்று 'ஹேங்' ஆகிவிட்டது கணினி.
எரிச்சலுடன் எழுந்தாள். போனில் சொல்லலாம் என்றால் வறுத்தெடுத்து விடுவாள் லதிகா. அப்புறம் வந்து மெயிலை அனுப்பலாம்...



சாயங்காலம் வரை ஒன்று மாற்றி ஒன்றாக வேலைகள்...

அப்போது தான் அந்த ஆனந்த அதிர்ச்சி. ஒன்றன் பின் ஒன்றாக...

''அம்மா, டான்ஸ் ப்ரோகிராமில் என் பேரை கேன்சல் பண்ணிட்டாங்க. சரி போங்கடான்னு விட்டுட்டேன். அடுத்த வாட்டி பார்த்துக்கலாம்மா,'' என்றபடி வந்தாள் சங்கீதா.
முகத்தைப் பார்க்காமலேயே கிச்சனுக்குப் போனாள்.

கம்பெனியிலிருந்து கணேசனின் போன் கால் வந்தது.

''மாலுக்குட்டி, எனக்கென்னமோ கொஞ்சம் யோசனையா இருக்கு. இப்ப பரீட்சை எழுதினா வீணா உடனே கம்பெனி மாறணுமேன்னு. அப்ளிகேஷனை கிழிச்சுப் போட்டிட்டேன். நீ அடிக்க வர மாட்டியே?'' கெஞ்சினான்.

இந்தப் பக்கம் மாமாவும் கையில் ஏதோ ஒரு கடிதத்தை வைத்துக் கொண்டு..
''ஒண்ணுமில்லே, மாநாடைஒத்தி வெச்சுட்டாங்கம்மா . இனி இங்கே மத்த வேலைகளை நான் பார்த்துக்கறேன்!''

மூடிய அதே வேகத்தில் திறக்கிற கதவுகள்!

நம்பவே முடியவில்லை...

மனசுக்குள் மறுபடி சிறகடித்தல்கள். சப்தம் அவளுக்கே கேட்டது.

நல்ல வேளை, கம்ப்யூட்டர் காலை வாரியது. இப்ப ஆன் செய்து பார்க்கலாம், எஸ் மெயில் கொடுத்திரலாம். சாதுவாய் மேஜைமேல் அமர்ந்திருந்த தகவல் தேவன் அருகில் வந்தாள்.
போட்டதும் திரை திறந்தது. விட்ட இடத்திலேயே...

சட்டென்று அவளுக்கு எல்லாம் புரிந்து போயிற்று. காலையில் ஸ்கூல் போகுமுன் கம்ப்யூட்டர் பக்கம் சங்கீதா ஒரு நிமிடம் வந்தது ஞாபகத்தில் நின்றது.

'அதான் விட்ட இடத்திலேயே ஓபன் ஆகுதே! பார்த்திருப்பாள். மத்தவங்க கிட்டேயும் அம்மாவுக்கு இப்படி ஒரு பிளான் இருந்திருக்கு என்ற செய்தியைக் கொடுத்திருப்பாள். அதான் உடனே சுதாரிச்சு அவங்களும்....

இத்தனை அன்பா என் மேல? இத்தனை விட்டுக் கொடுத்தலுக்குத் தயாரா இருக்கிறவங்க கூடவா நான் இருக்கேன்? வைரஸாக விழுங்கிற்று அந்த பிரமிப்பு...



''என்னம்மா மெயில்ல?'' என்று அருகில் வந்தாள். ஒன்றும் தெரியாதவள் மாதிரி நடிக்க மகள் சிரமப் படுவதைப் பார்த்து சிரிப்பு பொத்துக் கொண்டு வந்தது மனதில்.

எட்டிப் பார்க்கிற மாதிரி பார்த்து விட்டு, ''அட, சூப்பர் கெட் டுகெதர்! அம்மா... போயிட்டு வாம்மா. என்னம்மா இது, வர முடியாதுன்னு பதில் அடிச்சு வெச்சிருக்கே? அதை டெலிட் பண்ணும்மா... ஒரே வார்த்தை! ஒகே! கொடு....''

திரும்பி அவள் முகத்தைப் பார்த்தாள் மாலினி. அவள் கண்ணுக்குள் அதே போல் கணேசனுடைய, மாமாவுடைய முகங்களும் தெரிந்தன.

இந்தப் பாசம். இந்த அன்பு. இதற்காக எதையும் செய்யலாமே!

ஒருத்தருக்கொருத்தர் விட்டுக் கொடுப்பது தானே வாழ்க்கை!

அவள் டூர் செல்வதற்கான அத்தனை ஏற்பாடுகளையும் செய்ய ஆரம்பித்து விட்டனர் அவள் குடும்பத்தினர்.

('வார மலர்' இதழில் -ஜனவரி 23, 2011- வெளியானது)