Saturday, February 25, 2012

காதோடு...


''பொன்னம்மாவை வேலையை விட்டு நிறுத்திட வேண்டியது தான்!'' திடீரென்று அறிவித்தாள் சாரதா. ''வர வர அவ போக்கு சரியில்லே. நம்ம வீட்டில நடக்கிறதை எல்லாம் என் தங்கை ராதா வீட்டிலே சொல்லியிருக்கா..''
''எப்படித் தெரியும் உனக்கு?'' கேட்டார் பரதன்.

''நேத்து ராதா ஃபோன் பண்ணி என்கிட்டே 'என்ன உன் மகளை பொண்ணு பார்க்க வந்தவங்க பிடிக்கலேன்னு சொல்லிட்டாங்களாமே'ன்னு கேட்டா. யார் சொன்னதுன்னு கேட்டப்ப, இவ வாயைக் கிளறி தெரிஞ்சிக்கிட்டிருக்காங்கன்னு தெரிஞ்சது.''

''சரி போகட்டும், மன்னிச்சு விட்டிரு. வீட்டிலே வேலை செய்யறவங்க அங்கே இங்கே கொஞ்சம் வார்த்தையை விடத்தான் செய்வாங்க...''

''என்ன அப்படிச் சொல்றீங்க? நீங்களும் நானும்கூடத்தான் கம்பெனியில வேலை பார்க்கிறோம். மற்ற கம்பெனிகளிலே போய் நம்ம விஷயங்களைச் சொல்றோமா?''

''நீ சொன்னது நியாயம் தான். ஆனா ஒரு விஷயத்தை நீ கவனிக்கணும். அவள் ஏழை. நாம நடந்துக்கற மாதிரி, யோசிச்சு செயல்பட அவங்களால முடியாது. முடியாத அளவு வறுமை அவங்களை அலைக்கழிக்குது. உன் தங்கை இவளுக்கு தேங்காய், பழம், மீதமான காய்கறின்னு நிறையக் கொடுக்கிறா. நமக்குக் கொடுப்பவருக்கு பதிலுக்கு ஏதாச்சும் செய்யணுமேங்கிற விசுவாசத்திலே, அவ ஆர்வமா கேட்ட கேள்விகளுக்கு விலாவாரியா பதில் சொல்லியிருப்பாள் விவரம் புரியாமல். முதல்லே உன் தங்கச்சியைக் கண்டிச்சு வை. அப்புறமா பொன்னம்மாவை அழைச்சு, இது மாதிரி பேசறது எத்தனை தூரம் பாதிக்கும்னு எடுத்துச்சொல்லு. பதில் உபகாரம் செய்யணும்னா ராதாவுக்கு வீட்டு வேலை ஏதாவது செய்து தரச் சொல்லு. கண்டிப்பா புரிஞ்சுக்குவா!''

சாரதாவுக்கும் புரிந்தது!     

( 'குமுதம்' 21-09-2005 இதழில் வெளியானது)

13 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

”காதோடு” நியாயமான ஒரு ரகசியம் கடைசியில் சொல்லப்பட்டுள்ளது. பாராட்டுக்கள்.

குமுதத்தில் வெளியிடப்பட்டதற்கு வாழ்த்துகள்.

இராஜராஜேஸ்வரி said...

பதில் உபகாரம் செய்யணும்னா ராதாவுக்கு வீட்டு வேலை ஏதாவது செய்து தரச் சொல்லு. கண்டிப்பா புரிஞ்சுக்குவா!''

சாரதாவுக்கும் புரிந்தது!

எல்லோருக்கும் புரியும்!

வெங்கட் நாகராஜ் said...

நல்ல விளக்கம்....

நல்ல சிறுகதை....

ரிஷபன் said...

குமுதம் பிரசுரத்திற்கு வாழ்த்துகள்.
நமக்குக் கொடுப்பவருக்கு பதிலுக்கு ஏதாச்சும் செய்யணுமேங்கிற விசுவாசத்திலே, அவ ஆர்வமா கேட்ட கேள்விகளுக்கு விலாவாரியா பதில் சொல்லியிருப்பாள்
சரியான விளக்கம்

ADHI VENKAT said...

நல்லதொரு சிறுகதை. விளக்கங்கள் நன்றாக இருந்தது. குமுதத்தில் வெளியானதற்கு வாழ்த்துகள்.

ராமலக்ஷ்மி said...

// நாம நடந்துக்கற மாதிரி, யோசிச்சு செயல்பட அவங்களால முடியாது. //

எல்லா விஷயங்களுக்கும் இது மிகச் சரியாகப் பொருந்தும். இந்தப் புரிதல் இருந்தால் பல்வேறு காரணங்களுக்கும் இவர்களின் மேல் வருகிற கோபம் மறைந்து கையாளுவதும் எளிதாகும். நல்ல கருத்துள்ள கதை.

Rekha raghavan said...

வித்தியாசமான கோணத்தில் எழுதப்பட்ட அருமையான கதை.

Yaathoramani.blogspot.com said...

அனைத்து இடத்திலும் உள்ள பிரச்சனை
அதற்கு நீங்க்கள் சொல்லியுள்ள எளிமையான தீர்வு அருமை
மனம் கவர்ந்த பதிவு.வாழ்த்துக்கள்

வெங்கட் நாகராஜ் said...

Tha. ma. 3

தென்காசித் தமிழ்ப் பைங்கிளி said...

வணக்கம் நண்பரே தங்களின் பதிவை வலைச்சரத்தில் பதித்துள்ளேன்
நன்றி
http://blogintamil.blogspot.in/2012/03/blog-post_04.html

கோமதி அரசு said...

நாம நடந்துக்கற மாதிரி, யோசிச்சு செயல்பட அவங்களால முடியாது. //

பணி செய்பவர்களின் மனநிலையை அழகாய் சொல்லி விட்டீர்கள்.

கொடுப்பவர்கள் நல்லவர்கள் அவர்கள் கண்ணோட்டத்தில்.

கே. பி. ஜனா... said...

panju uthandaraman writes
அன்பு ஜனா சார்,வணக்கம்
2005 பொன்னம்மா கதைநல்லாயிருக்கு .ஒருபக்கக்கதை ஸ்பெஷலிஸ்ட்களில் முதல்
இடம் தங்களுக்குத்தான்..இங்கே வெயில் சூடு கிளப்புது..அங்கேயுமா சார் ?
வாழ்க-மாலாஉத்ஸ்

கீதமஞ்சரி said...

சிறிய கதைக்குள் ஒரு பெரிய விஷயத்தை அடக்கிவிட்டீர்கள். நல்ல கருத்துச் சொல்லும் கதைக்குப் பாராட்டுகள்.

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!